ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீக்ஷிதர்

Post Reply
grsastrigal
Posts: 897
Joined: 27 Dec 2006, 10:52

ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீக்ஷிதர்

Post by grsastrigal »

எங்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உபன்யாஸகர், ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் ஸுப்ரமண்ய தீக்ஷிதர், கடந்த 29.4.2026, அவர் மிகவும் நேசித்த, எங்களை நேசிக்க வைத்த, ஸ்ரீ மத் ராமாயணம், ஸ்ரீ மத் பாகவதம் இந்த இரண்டு இதிகாசங்களோடு இரண்டற கலந்து விட்டார். சுமார் 85 வயது.

சேங்காலி (காளி) புரத்திற்கே உண்டான வாக் விலாசம். நேர்த்தி, மிடுக்கு, எல்லாமே உரியவர். ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்களிடமும், ப்ரும்மஸ்ரீ நாராயண தீக்ஷிதர் அவர்களிடம் நேராகவே மந்த்ரோபதேசம் பெற்று, அவர்கள் உடனேயே உபன்யாசம் செய்தவர். ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீட்சிதரின் வழித்தோன்றலில் கடைசி குடும்ப மெம்பர் இவர்தான்

எவ்வளவு பெரிய இழப்பு ?

காலையில் யூ டியுப் சேனலில், லலிதா சஹஸ்ரநாமம், ஒரு சில ஸ்லோகங்கள் பற்றி உபன்யாசம் செய்துவிட்டு, கொஞ்சம் நெஞ்சு வலி என்று சொல்ல, ஆட்டோவில், தன் மகனுடன், ஹாஸ்பிடல் சென்று, ECG எடுக்க உள்ளே அனுப்பி, மகன் பணம் கட்டுவதற்குள்......மரணம்.

மதியம் ஒரு 11.30 சுமாருக்கு மரணிக்க 8 PM க்குள் எல்லா காரியங்களும் முடிந்து விட்டது. ICU, ஐஸ் பெட்டி. ஒன்றும் கிடையாது.

ஒரு தடவை கூட ஹாஸ்பிடல் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்கினது கிடையாது.

இந்தக் காலத்தில், இப்படி ஒரு மகானைப் பற்றி கேட்பதே அரிது.

சோம யாகம் செய்தவர். தினமும் நித்ய கர்ம அனுஷ்டானங்கள் விடாமல் செய்தவர். எவ்வளவு ஆச்சரியங்கள், எவ்வளவு உபன்யாஸங்கள், எத்ததனை இடங்கள், குருவாயூர் என்ன, குணசீலம் என்ன, திருப்பதி, வரஹூர், அயோத்யா, பூரி ஜகன்னாத் மதுரா. – பல இடங்களில் சென்று உபன்யாசம் செய்து, எவ்வளவு ஆஸ்திக ஜனங்களை உத்தாரணம் செய்து இருக்கிறார் ?

இந்த வருடம் மட்டும் ஜனவரி யில் வரஹூர் ஸ்ரீ மத் பாகவாத சப்தாஹம் . பிப்ரவரியில் அம்பலப்புழா வில் சப்தாஹம். மார்ச் ல் குருவாயூரில் சப்தாஹம். ஏப்ரலில், திருமலாவில் காஞ்சி சங்கர மடத்தில் சப்தாஹம். ஏப்ரல் கடைசியில், அந்த குருவாயூரப்பன் திருவடியில்.......அவரிடம் சப்தாஹம் சொல்ல வைகுண்டம் சென்று விட்டார்.
இப்படி ஒரு மஹான் நம் காலத்தில் வாழ்ந்திருக்கிறார்.

இவர் அழைத்து செல்லும் இடங்களுக்கு வருபவர்கள் – ஒரு பைசா செலவு பண்ண வேண்டாம். தங்குவதற்கு, மூன்று வேளை சாப்பாடு, முடிந்தால் பாராயணம் செய்யலாம். கதை கேட்க வேண்டும். சம்ப்ரதாய பஜனை, அஷ்டபதி இத்யாதி உண்டு, அதில் கலந்து கொள்ள வேண்டும். உபன்யாசம் கேட்க வேண்டும்.
குருவாயூருக்குச் சென்றிருக்கிறேன். காலை பாராயணம். மூன்று வேளையும் குருவாயூரப்பன் தரிசனம். சாயந்திரம் காதுக்கு இனிமையான ஆன்மீக சொற்பொழிவு – வேறு என்ன வேண்டும். எல்லாவற்றிர்க்கும் மேல் – மூன்று வேளையும் வயிறார சாப்பாடு.

அவருடைய ராமாயண நவாஹம், ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் கேட்க கொடுத்து வைத்து இருக்கவேண்டும். பிரம்மஸ்ரீ அனந்த ராம தீக்ஷிசிதர் உபன்யாசத்தை நேரில் பார்க்காதவர்கள், இவர் உபன்யாசத்தை பார்த்தால் போறும். அச்சு அசலாக அப்படியே இருக்கும்.

புண்டரீகம் போட்டு, (கோபிகாஜி வணஸ்மரணம்)
“ஷ்யாம காசன சந்திரிகா” என்று மூக பஞ்ச சதியைத் தொட்டு, த்ரயம்பக புராதீஸம், - என்று சேங்காலிபுரம் அவருடைய குல தெய்வம் “தர்ம சாஸ்தா” ஸ்லோகம் சொல்லி முடித்து.......
கதையை ஆரம்பித்தால், ஒரு புத்தகம், Reference இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போல், பிரவாஹமாக நம் மனத்தைக் குளிர செய்த பல உபன்யாசங்கள்.

இப்போது வரும் யூ Tube உபன்யாசங்கள். Live Telecast, எத்தனை பேர் “லைக்” போடுகிறார்கள். என்னுடைய சேனல் subscribe.. பண்ணுங்கோ என்று பாயாமல். என் பணி இறைப்பணி. எனக்கு எதற்கு கிரீடம், புகழ்ச்சி எல்லாம் என்று நிறை குடமாக வாழ்ந்தவர்

ஒரு இரண்டு மணி நேரம் கச்சேரி செய்பவர்கள், என்னமோ ஸ்கூலுக்குப் போறா மாதிரி புஸ்தகங்கள் எடுத்துக் கொண்டு வந்த (இப்போது Tab), தியாகராஜர் கிருதியை, இங்கிலீஷ் ல் எழுதி “ராமா நீ ஸமான வேறு” என்று ராமனே பயப்படும்படியா கரஹரப்ரியா வை பாடும் உலகத்தில், இப்படியும் ஒரு மஹான். !!!!

சப்தாஹ சாம்ராட் என்று காஞ்சி பெரியவாளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஸரஸ பாஷி என்று பல பட்டங்கள் பெற்றாலும், ஏன் குடும்பத்தில் ஒருவர்.

என்ன மேதா விலாஸம், நாரயணீயம் என்ன, சப்தாஹத்தில் எத்தனை கிளைக் கதைகள் என்ன ? ராமாயணம் ? எவ்வளவு மேற்கோள்கள், காளிதாசன், விஷ்ணு புராணம், க்ஷேத்ர மாஹாத்மியங்கள் .....இவ்வளவையையும் நான், இந்த ஜன்மத்தில், நேரே கேட்க வைத்த பெரிய குருவாஹ வந்த அவர் மறைவு ஆன்மிக உலகத்துக்கு பெரிய இழப்பு.
எனக்கு personal ஆக மிகப் பெரிய இழப்பு.

நாராயண தீர்த்தர் பாடிய வரஹூர் பெருமாளிடம் அவர் கொண்ட பக்தி அளவிட முடியாது. அவர் முதல் சப்தாஹம் வரஹூரில் பண்ணினார். ஸ்ரீ. ப்ரேமி அண்ணா அவருக்கு தங்க தோடா போட்டு கௌரவித்ததும் வரஹூர். 100 வது சப்தாஹம் செய்ததும் வரஹூர் தான்.

என் பெற்றோர்களின் சதாபிஷேக நினைவாக, சில தரங்கிணி பாடல்களை தொகுத்து ஒரு சிரிய புத்தகமாக வெளியிட்டேன். அதற்கு முன்னுரை எழுத தீட்சிதர் மாமாவுக்கு போன் செய்து கேட்டேன். உடனே “பேஷா சொல்றேனே.. என்று போன் லேயே எனக்கு சொன்னார்”

அவர் மறைந்த அந்த தருணங்கள் மிகவும் குறைவு. 7-8 மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் அவர் உபன்யாசங்கள் மூலம் நம்மோடு வாழ்ந்த வாழ்க்கை மிக மிக அதிகம். அதை நாம் நினைத்து சந்தோஷப்படவேண்டும்

ஒரு மஹா பெரியவா, ஒரு ஹரிதாஸ் கிரி, ஒரு தீக்ஷிதர் – நம் கண் முன்னாலேயே இருந்து, நம்மை மேலே தூக்கி விட்டு சாதாரணமாக கடந்து சென்றவர்கள்.

கொஞ்சம் குருஜி:


இப்போது கூட குருஜி ஹரிதாஸ் கிரி ஜல ஸமாதி ஆனதை நேரில் பார்த்த, இப்போது இருக்கும் பக்தர்களைப் பார்த்திருக்கிறேன். அலகானந்தாவில், கோடீஸ்வரர் லிங்கத்தை சுற்றி வரும் கங்கை. அதில் குருஜி, நதியை மூன்று முறை பிரதக்ஷிணம் செய்து, நீரில் மேல் பத்மாசனம் போட்டு உட்கார்ந்து. இரண்டு முறை மூழ்கி , மூன்றாவது முறை, ஜல சமாதி இது ஏதோ 100 ஆண்டுகள் நடந்தது கிடையாது. இப்போது நடந்தது. யு டியுப் இருக்கிறது
எதோ ஒரு துண்டை கட்டிக்கொண்டு, நாம சங்கீர்த்தனம் செய்த ஒருவர், நம் குருஜி. இதெல்லாம் நாம் உணர வேண்டும்.

நேரில் பார்த்தவர்கள் இந்நிகழ்வை சொல்லும் போது, அவர்கள் உடல் சிலிர்ப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

திரும்பவும் தீக்ஷிதர்

மறக்கவே முடியாத நிகழ்ச்சி. அயோத்யாவில் இராமாயண நவாஹம். 9 நாள் கோலாகலமாக நடந்தது. அதில் பட்டாபிஷேக கடைசி நாளில், கல்யாண உத்சவத்திற்கு. உத்தர பிரதேச முதல் மந்திரி ஸ்ரீ. யோகி ஆதித்யநாத் அவர்களை பங்கு கொள்ளுமாறு அழைத்திருந்தார்.

நீங்கள் நம்பமாட்டீர்கள். உடனே அடுத்த நாள் முக்கிய மந்திரி அலுவலகத்தில் இருந்து. “உங்கள் கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். உங்கள் விழா இனிதே நடைபெற எல்லா உதவியையும் செய்கிறேன்”

என்று ஸ்ரீ. யோகி ஜி கையெழுத்து போட்டு ஒரு பதில் அனுப்பியிருந்தார்

நான் அசந்து போனேன்.

அங்கு அயோத்யா ராமர் முன்பு, பட்டாபிஷேக சர்கம் உபன்யாசம் சொல்கிறார். தமிழில், அப்பப்போது சம்ஸ்க்ருதம். அப்படியே எல்லோரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த 100 பேரில் எங்களுடன் வந்திருந்த சுமார் 10 பேருக்குத்தான் தமிழ் தெரியும். !!!!

இந்தப் பதிவில் அவர் உபன்யாசங்களில் இருந்து சில சுவையான சம்பவங்களைப் பகிறுகிறேன்.

grsastrigal
Posts: 897
Joined: 27 Dec 2006, 10:52

Re: ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீக்ஷிதர்

Post by grsastrigal »

தீக்ஷிதரின் உபன்யாசம் – தேன் துளிகள் - 1

மரவுரி அழகு

அழகில்லா ஒரு வஸ்து, அழகான ஒரு விஷயத்துடன் சேரும்போது அதுவும் அழகாக ஆகிவிடும்
மரவுரி கட்டிக்கொண்டு ராமன் கிளம்பியபோது, ஒரு ராஜாவாக, ஆபரணங்களும், ஆடைகளும் கட்டிக்கொண்டு இருக்கும்போது எவ்வளவு அழகாக இருப்பானோ, அதைவிட பல மடங்கு அழகாக இருக்கிறான். அவன் அழகைப் பார்த்து, காட்டில் ரிஷிகளே ஆசை கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றன.
காளிதாசன், சாகுந்தலத்தில் இந்த கருத்தை எடுத்து ஒரு உவமையில் சொல்கிறார்.
சாகுந்தல நாடகத்தில், “மரவுரியை உடுத்தி இருப்பதால், சகுந்தலையின் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும் அழகு வாய்ந்தவளாக காணப்பட்டாள். சந்திரனில் காணப்படும் களங்கம், அதன் அழகைக் கெடுப்பதில்லை.”

सरसिजमनुविद्धं शेवलेनापि रम्यं
मलिनमपि हिमांशोः लक्ष्म लक्ष्मीं तनोति
इयं अधिकमनोज्ञा वल्कलेनापि रम्या
किमिव हि मधुराणां मण्डनं नाकृतीनाम्

குளத்தில் பாசி பார்த்திருப்போம். பச்சையாக இருக்கும். அது குளத்தில் இறங்கும்போது காலில் ஒட்டிக்கொண்டு விடும். கஷ்டப்பட்டு எடுத்து எறிவோம். கடுப்பாக இருக்கும். அந்த பாசியே, குளத்தில் அலைகளால் லேசாக நகர்ந்து அங்கு இருக்கும் தாமரையில் ஒரு 3 அடிக்கு, தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும். அது அந்த தாமரைக்கு மிக அழகாக இருக்கும். ஒரு பாசிக்கு அடித்த யோகம்.
மரவுரியின் அழகை அருணாச்சல கவிராயர், ராம நாடக கிருதியில் -- தரித்த மரவுரி இடையும் நடையும் கண்டு மனதையெல்லாம் உருக்கி வார்க்குமே --என்கிறார். “

அதே போல் குருக்ஷேத்ர யுத்தத்தில், கிருஷ்ணர், தேரை லாவகமாக ஒட்டி, அர்ஜுனனுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்கிறார் இது மிகவும் கஷ்டமான ஆயாசமான வேலை. அப்படிப் பண்ணும்போது, யுத்த பூமியில், குதிரைகள் ஓட, அந்த புழுதி மேலே எழும்பி, பரமாத்மாவின் நெற்றியில் முத்து முத்தான வேர்வை- அதன் மேல் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

அதைப் பார்க்கும்போது, ஸ்ரீ ரங்கத்தில், பெருமாளுக்கு, முத்தங்கி சேவை நடக்கும். மிகவும் விலை உயர்ந்த முத்துக்கள், பவழம் இவைகளை வைத்து ரங்கநாதரை அலங்காரம் செய்வார்கள். இதைவிட, யுத்த பூமியில், கிருஷ்ணர் பல மடங்கு அழகாக இருக்கிறது.
”புழுதிக்கு வந்த பெருமை”

இதே போல், “நயா பைசா” பிரயோஜனம் இல்லாத நாம். அவர் திருவடிகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். “பட்டி மாடான நான் உன்னை விட்டிராமே உலோகித, பத்ம சீர்பாத நீ இனி வந்து தாராய்” என்று திருசிராப்பள்ளி திருப்புகழில். அருணகிரிநாதர் பாடுகிறார்
தாயுமானஸ்வாமிக்கு, உபதேசம் செய்த முருகனாக பாவித்து செய்த அற்புதமான திருப்ப்கழ்
இதே போல் மெய் சிலிர்க்க வைக்கும் பல உபமானங்கள், முடிந்தபோது எழுதுகிறேன்.

என்னுடைய எண்ணம்:
இதை நாராயண தீர்த்தர், தரங்கத்தில்.
உத்தவர் கிருஷ்ணனின் உத்தரவின் பேரில், கோபிகைகளிடம் சென்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பி வந்து, கிருஷ்ணரிடம், கோபிகளின் பக்தியை புகழ்ந்து சொல்லுவதாக ஒரு பாட்டு இருக்கிறது.
“இதி வததி ஹி கோபி..” என்று ஆரம்பிக்கும் தரங்கம். நாங்கள் காம்போதியில் பாடுவோம். அதில் சொல்கிறார்.

मणिनायक मणिरपि परमधुना
गुनयोगे सति काचमणीनाम
मरकतमणिरपि मध्ये घटितो
गणनीयह: किं नहि काचेषु ।

“இரத்தினங்களில் மிகவும் சிறந்தது என்று புகழப்படும் மரகதம், பாசி மணிகளின் நடுவே சேர்க்கப்பட்டாலும், அந்த மரகதத்தின் அழகு ஒரு போதும் குறையாது அல்லவா, அதே போல், கிருஷ்ணன் எங்களிடம் இருப்பதால் அவர் அழகு கொஞ்சம் கூட குறையாது. என்று கோபிகைகள் சொன்னதாக ....சொல்கிறார்
மேலே உபமானங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நாமே எப்போவாவது கோவிலுக்குப் போய், ஒரு வீபூதியோ, குங்குமமோ இட்டுக்கொண்டு வந்தால், வீட்டில், “என்னப்பா பளிச் னு இருக்கியே” என்கிறார்கள். என்ன இது கொஞ்சம் உல்டா. அழகான வஸ்து அழகில்லாத நம்மை சேருகிறது.

grsastrigal
Posts: 897
Joined: 27 Dec 2006, 10:52

Re: ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீக்ஷிதர்

Post by grsastrigal »

தேன் துளிகள் 2

நாரதர் உபதேசித்த ராமாயணம்

முதல் ஸர்கம், நாரதர் வால்மீகிக்கு உபதேசம் செய்த ராமாயணம். ராமாயணத்தை முழுவதுமாக சுருக்கி சொன்ன அற்புதமான ஒரு ஸர்கம்

இதை மையமாக வைத்துத்தான், வால்மீகி 24000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணம் எழுதுகிறார்...
ராமாயணத்தில் பல இடங்களில், ராமாயணம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. சுந்தர காண்டத்தில் சில இடங்களில் ஆஞ்சநேயர், முழு ராமாயணத்தைச் சொல்கிறார்.

சாதாரணமாக் ஒரு ஸர்கம் முடிந்தவுடன், பல ஸ்ருதி என்று ஒன்று உண்டு. பல இடங்களை கேட்பவர்க்கு, சகல செல்வங்களும், புகழும் கிடைக்க வேண்டும் என்று தான் இருக்கும்.

அனால், நாரதர் உபதேசித்த இந்த முதல் ஸர்க்கத்தில், , படிப்பவர்க்கு சகல ஸௌபாக்யங்களும் கிடைக்கும் என்று கூறுகிறார். இப்படி சொல்கிறார்

“ராமாயணம் என்ற கதையைக் படிப்பவர்க்கு, மகன்கள், பேரன்கள், உறவினர்கள் கூட சேர்ந்திருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கிறது அவர் உயிர் துறந்தபின் ஸ்வர்க்கத்திற்குச் சென்று அங்கே கௌரவிக்கப்பட்டு நிலையாக தங்கி விடுவார்”

இது மிகவும் விசேஷமாகும். விஸ்வாமித்ரர், ஸ்கந்த ஜனனம் பற்றி சொல்லும்போது பல ஸ்துதியில், கேட்பவர்களுக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும் என்று சொல்கிறார். இப்படி பல இடங்கள்.

ஏன், நாரதர் சொல்லும் ஸங்க்ஷேப ராமாயணத்தில்,
“சொல்பவரை” ப் பற்றி குறிப்பிடுகிறார் என்றால் “நாரதர் குணத்தைப் பொறுத்து, -அவர் சொல்லும் இருக்கிறது.” அவருக்கு சொல்லி சொல்லி பழக்கம். அவர் ஒன்று தம்புராவை மீட்டிக்கொண்டு “கல்யாண குணங்களை” பாடிக் கொண்டு இருப்பார். இல்லையென்றால் “யாருக்காவது உபதேஸம்”. இதை கலகம் என்று நாம் நினைத்தால், அது நமது அறியாமை

அதனால் தான் படித்தால் பெருமை என்கிறார்.

grsastrigal
Posts: 897
Joined: 27 Dec 2006, 10:52

Re: ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீக்ஷிதர்

Post by grsastrigal »

தேன் துளிகள் 3

கிருஷ்ணாய வாஸுதேவாய...

நமக்கு பரிச்சயமான இது குந்தி ஸ்துதி. குந்தி கிருஷ்ணரைப் பார்த்து சொன்ன ஸ்துதி.

குருக்ஷேத்ர யுத்தம் முடிந்து, தர்மபுத்திர பட்டாபிஷேகம் ஆகிறது. கிருஷ்ணர் முன்னர் இருந்து, அழகாக முடித்து வைக்கிறார். இத்தனை வருட கஷ்டங்களுக்கு விடிவு காலம்.

வைபவம் முடிந்தவுடன், ஒரு 18 படி கீழே இறங்கி உட்கார்ந்து கொள்கிறார். தர்மபுத்ரர், அர்ஜுனன், மற்றும் சகோதர்கள் மேலே அரியாசனத்தில் அமர்ந்திருக்க, கீழே பரமாத்மா.

அப்போது இவர்கள் தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்ததால், குந்தியை அழைத்து வருவதற்கு உத்தர விடுகிறார்.

குந்தியைப் போல் ஒரு “மிகவும் வருந்தத்தக்க” பாத்திரம், இதிகாச புராணத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்காது. மணி மணியாக 5 குழந்தைகளைப் பெற்றும், அவள் குழந்தைகளோடு சேர்ந்து இருக்கவில்லை. இருந்தாலும், ஒரே சோகம்தான். பஞ்ச பாண்டவர்கள் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள். அரண்மனையில் உட்கார்ந்து, தன் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா ? இல்லையா ? என்று தெரியமால் பரிதவிக்கும் தாய் !!!!

குந்தி வருகிறாள். அந்தச் சபையைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறாள். மேலே தன் குழந்தைகள் உட்கார்ந்து இருக்க, கீழே பரமாத்மா.

ஓடி வந்து கிருஷ்ணர் காலை பிடித்து கதறுகிறாள்.

கிருஷ்ணர். “என்ன அத்தை இது. எழுந்திருங்கள்.. சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அழுகிறீர்களே” என்று கேட்கிறார்.

குந்தி “கிருஷ்ணா, இது என்ன விளையாட்டு ? உன்னை அண்டி வாழும் குடும்பம் நாங்கள். நீ இல்லாவிட்டால், நாங்கள் எங்கே ? அப்படி இருக்கும் நீ, அண்டி இருக்கும் எங்களை மேலே உட்கார வைத்து, நீ கீழே உட்கார்ந்து இருக்கிறாயே ?”. இது சரியா ?

நம் நிஜ வாழ்க்கையில் நினைத்துப் பாருங்கள். நம்மை அண்டி ஒருவர் இருக்கிறார். அவர் நமக்கு மேலே கூட இல்லை. நமக்கு சமமாக உட்கார அனுமதிப்போமா ? அனால் இங்கே கிருஷ்ணனைப் பாருங்கள் ...
4 காசு இருக்கிறது என்று நம்மிடம் வேலை செய்பவர்களை எப்படி அலட்சியம் செய்கிறோம். ஓடித்த் வெண்டைக்காயை அப்படியே திருப்பிப் போடுவது, “என்னப்பா கறிகாய் நல்லாவே இல்லை” என்று சொல்லி வாங்கி பேரம் பேசுவது.

கிருஷ்ணன் நான் என்னம்மா பெரிசா பண்ணினேன் என்று கேட்க, குந்தி “எங்களை எப்படி எப்பெல்லாம், காப்பாற்றினாய் .. என்று லிஸ்ட் குடுக்கிறாள். பீமனுக்கு விஷம் கொடுத்தது, அரக்கு மாளிகை, திரௌபதி சபை அவமானம். துர்வாசர், சாப்பிடாமலே ஏப்பம் விட்ட கதை. குருக்ஷேத்ர வெற்றி.......

பாண்டவர்களை காப்பாற்றுவேன் என்ற ஒரு சத்யத்திறக்காக கிருஷ்ணன் பண்ணிய வேலைகள்.....

கிருஷ்ணனின் காருண்யம். அப்படிப் பேசும்போது சொன்ன ஸ்லோகம் தான்

கிருஷ்ணாய வாசுதேவாய, தேவகி நந்தனாய ச
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

அப்போதுதான் குந்தி சொல்கிறாள். “எனக்கு கஷ்டத்தையே கொடு” அப்போதுதான் நான் உன்னை நினைப்பேன். நீ என்னையும் ஏன் குடும்பத்தையும் காப்பாற்றுவாய்.

எப்படிப்பட்ட பிரார்த்தனை பாருங்கள் !! யாராவது நாம் கோவிலுக்குப் போய், எனக்குக் கஷ்டத்தைக் கொடு என்று கேட்போமோ ?.....

Post Reply