kannukku theriyaadha maargazhi kolangal.

Post Reply
Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

kannukku theriyaadha maargazhi kolangal.

Post by Ponbhairavi »

கண்ணுக்குத் தெரியாத மார்கழிக் கோலங்கள் !


ஒரு பழைய நோட் புக் முழுவதும் என் நான்கு வயதுப் பேரன் குறுக்கும் நெடுக்குமாய் வட்டமாய் வளையமாய் ‘கிறுக்கி” வைத்திருக்கிறான் –நேர்க கோடுகள் வளைந்த கோடுகள் இத்தியாதி
இதே கோடுகளை ஒரு cartoonist கிறுக்குகிறான் . அதில் நாம் அரசியல் தலைவர்கள் பலரைக் காண்கிறோம் .சில கோடுகளில் எத்தனை உருவங்கள் !
கலைஞன் மனதுக்குள் ஒரு தலைவனின் உருவம் .அவன் அதைக் கோடுகளாய் போடும்போது நாம் அதில் உருவத்தைக் காண்கிறோம் .கலைஞன் மனதுக்குள் இருந்த அதே உருவம் !
கோடுகளில் ஒரு “ ஒழுங்கு” வேண்டும் . அப்போது அது கலையாகிறது .
கோடுகள் மாத்திரம் தான் என்றில்லை .கோடுகள் இடையே அகப்பட்ட காகிதத்தின் வெள்ளை வெளியும் (gaps)முக்கியம் .
கலைஞன் போட்டஉருவத்தை நாம் அடையாளம் கண்டு ரசிக்க நமக்கு அந்த உருவம் “முன்பே” தெரிந்திருக்கவேண்டும் .இல்லையெனில் எப்பேர்பட்ட அறிஞனுக்கும் அது விளங்கப்போவதில்லை.

ஆகாச வெளியில் எத்தனையோ சப்தங்கள் –அலைகள்.- “சப்த பிரம்ம மயி” என்பது அம்பாளைக் குறிக்கும் .இதில் கேளா ஒலிகள்( ultra –sounds) போக மனித காதுக்கு கேட்க கூடிய ஒலிகள் கொஞ்சம்தான். அந்த ஒலிகளில் ஒரு “ஒழுங்கு” எற்படுத்தினால் அது இசை .அதில் 4 ஒலிகளை (ஸ்வரம் )கொண்டது வேதம்.ஏழு ஒலிகளைக்கொண்டது இசை.
இசைக் கலைஞர் ஒரு ஸ்வரூபத்தை (abstract vision) மனதில் த்யாநித்து ஏழு ஒலிகளைக்கொண்டு அதற்கு உருக்கொடுக்கிறார் (ராகம் )நாமும் அப்போது அதே ராகத்தை மனக்கண்ணில் காண்கிறோம் காது வழியே.
ஒலிகளுக்கு இடையே உள்ள நிசப்தங்களும் (gap) முக்கியம்
கலைஞன் படைக்கும் ராகம் நமக்கு முன்பே தெரிந்து இருக்கவேண்டும் அப்போது தான் தொடர்பு ஏற்படும்.
இறைவன் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆயினும் அவனுக்கு எத்தனை உருவங்கள்.!நம்மை கவர
இசை கண்ணுக்கு தெரிவதில்லை ஆயினும் அதற்கு எத்தனை ஸ்வரூபங்கள் !!நம்மை மகிழ் விக்க.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kannukku theriyaadha maargazhi kolangal.

Post by cmlover »

கலை நம் உள்ளே இருக்கிறது.
கலைஞன் ஒரு கருவி மாத்திரமே.
அதை உருவாக்குவது நாம் தான்!
மன பக்குவம் வேண்டும்; பொறுமை வேண்டும்;
அனைத்திற்கும் மேலாக ரஸிகத்தன்மை வேண்டும்.
அதை ஒத்த உணர்வுடையோருடன் பகிர்வதிலுள்ள
இன்பமே இன்பம்!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: kannukku theriyaadha maargazhi kolangal.

Post by Ponbhairavi »

இசையும் ஓவியமும்.
ஓவியங்கள் காலத்தைக் கடந்து நிற்கின்றன:. அஜந்தா தஞ்சை பெரிய கோவில் போன்ற இடங்களில்.- தியாகராஜ சுவாமிகள் ஊத்துக் காட்டார் போன்றவர்கள் பாடி இப்போது நாம் கேட்க முடியவில்லையே( நூறு வருடங்களாகத்தான் ஒலியைப் பதிவு செய்து வருகிறோம்) ஆனாலும் அவர்கள் இசைத்த பாடல்கள் கிடைத்து இருக்கின்றன.அவர்கள் தந்த இசை குறிப்பும் சிஷ்ய பரம்பரைகளும் கலாச்சார சூழ் நிலைகளும் .தெரிவதனால் எப்படி பாடினரோ என்று வியந்தாலும் இப்படித்தான் பாடி இருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது.
ஞானமில்லாத அந்நிய அக்கிரமிப்பாளர்கள் எண்ணிலடங்கா சிற்பங்களையும் ஓவியங்களையும் சிதைத்து அழித்துவிட்டார்கள்.அவை concrete வடிவத்தில் இருந்தமையால். நல்ல காலம் நம் இசை தப்பித்தது இசைக்கு abstract form இந்த வகையில் ஒரு வர பிரசாதம்

கலை கூடங்களில் ஓவியங்களை பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.அவை art in finished form.ஓவியங்களை அவை படிப் படியாக உருவாகும் நிலையில் காண முடிவதில்லையே !!–(art in the process of creation.) எனும் வருத்தம் ஏற்படுகின்றது.ஆனால் இசையில் இக்குறையை தீர்த்து கொள்ள முடிகிறது. ஒரு கச்சேரி யை நேரில் கேட்கும்போது நாம் சங்கீதத்தை during the process of creation கேட்டு இன்பம் அடைகிறோம் . பாடகருடைய கற்பனை ஓடும இடங்களுக்கெல்லாம் நாமும் அவருடன் மானசீகமாக சென்று ராகத்தின் ஸ்வரூபத்தைக் காண்கிறோம்
எல்லா ராகங்களும் ஒன்றுபோல் தானே இருக்கிறது இவற்றுள் என்ன வேறுபாடு என்று சிலர் கேட்கிறார்கள்.ஒரு பாமரனுக்கு தெருவில் போகும் எல்லா கார்களும் ஒன்று போல் தான் முதலில் தோன்றும்.ஆனால் அவனே ஒரு traffic policeman ஆகிவிட்டால் எந்த காரை பார்த்தவுடனும் அது என்ன மேக் என்ன மாடல் போன்ற விவரங்களை சொல்ல முடியும்.பாமரன் என்ன? நமக்கும் கூடத்தான் எல்லா E.C.G. எல்லா X-ray களும் ஒன்றுபோலவே தான் தோன்றுகின்றன. ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு தனி ஸ்வரூபம் இருக்கிறது
ஒரு இளம் பெண்ணின் படத்தை பல ஓவியர்கள் வரைகிறார்கள் வார பத்திரிகைகளில் பார்க்கிறோம். கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் , ஒரு படத்தை பார்த்தவுடன், இதை வரைந்தவர் கோபுலு, மணியன் செல்வம், மதன் , ஜெயராஜ் , வர்ணம் etc..என்று சொல்லிவிட முடியும் . எல்லாமே பெண்ணின் படந்தான் என்றாலும் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு தனி specificity, இருக்கிறது.ஒரே ராகத்தை பல வித்வான்கள் பாடினாலும் ஒவ்வொருவருக்கும் ஓர் specificity இருக்கிறது . இதைத்தான் பாணி என்கிறார்கள்.
C M L மேலே சொன்னது போல இசை சுகானு பவதிற்கு ரசிக தன்மை . மனப்பக்குவம் பொறுமை வேண்டும்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kannukku theriyaadha maargazhi kolangal.

Post by cmlover »

அருமையான உவமைகள்!

ஒரு அழகான ஓவியத்தை ஒரு சிறு குழந்தையிடம் கொடுங்கள். ஒரு சிறிது நேரத்தில் சுக்குநூறாக கிழித்து விடும். ஒரு அழகான பெண்ணை ஒரு புலிக்கூண்டில் விட்டுப் பாருங்கள். அவள் கதி என்ன? பழமொழியே கூறுகிறது: கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை... அழகு ஓவியத்தில் இல்லை; இசையில் இல்லை. அது கலைஞனின் மனதில் இருக்கிறது; ரஸிகனின் மனதில் இருக்கிறது.
கலைஞனின் கடமை, ரஸிகனின் கடமை அதை பகிர்ந்து கொள்வதில் இருக்கிறது.

பாரதியின் கவிதைகள் வெறும் பிதற்றல் தான்; புரியாதவருக்கு! கர்நாடக சங்கீதமென்றால் என்னவென்று கேட்கிறார்கள். புரிய வைப்பது நம் கடமை. பக்தர்கள் இல்லையென்றால் கடவுள் செத்து விடுகிறான்! ரஸிகர்கள் இல்லாமல் கலை செத்து விடுகிறது!

நம் தாரக மந்திரம்:
"யாம் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக"

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: kannukku theriyaadha maargazhi kolangal.

Post by Ponbhairavi »

ஆலாபனை

ஒரு கார்டூனிஸ்ட் சில கோடுகள் போடுகிறார்..உடனே ஒரு அரசியல் தலைவர் நமக்கு தெரிகிறார்.. பாடகர் சில ஒலிகளை (வாயைக் கூட திறக்காமல் humming பண்ணுகிறார்.அங்கே ஒரு ராக ஸ்வரூபம் தோன்றுகிறது.
சரி ராக ஸ்வரூபம் தான் தெரிந்து விட்டதே பின் எதற்கு கால் மணி அரை மணி அந்த ராகத்தையே த த ரி ந ன பண்ணவேண்டும்?

ஒரு ஓவியர் முன் சென்று அவருடைய process of creation ஐ சற்று கவனிப்போம்.- .S- போன்ற ஒரு நீண்ட கொக்கி வரைகிறார் பின் மேலே இரு புறமும் இரண்டு புள்ளி வைக்கின்றார் . இது விநாயகர் படம் என்று அப்போதே சிலருக்கு புரிந்துவிடும்.ஓவியர் தொடர்கிறார்.: மேலே ஒரு முக்கோணம் அது கிரீடம் ,இரு புறமும் பெரிய brackets போல இரண்டு, இவை காதுகள்.,பின் வயிறு, கால்கள் ,கைகள், தந்தம் .ஐந்து நிமிடம் ஆயிற்று. மேலும் தொடர்கிறார்:கிரீடத்தில் மணிகள், நெற்றியில் திருநீறு .கைகளில் ஆயுதங்கள் etc.. எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்கு தக்கபடி details . முதல் ஸ்வரூபம் முழுமை பெற்று ப்ரத்யக்ஷ மாகிறது.
த த ரி ன ன தான் detailed process of raga swarupa creation. ராக ஆலாபனை என்று சொல்வார்கள்.
எல்லா ராகத்திற்கும் ஒரே த த ரி ந னா தானா?.
இல்லை. நம் ஓவியரை கவனியுங்கள். வரையும் மூர்த்தி யை பொறுத்து தான் அங்கங்கள் .கிருஷ்ணர் உருவத்திற்கு தும்பிக்கை வைக்க முடியாது. அம்பாள ஸ்வரூபத்திற்குபெரிய காதுகள் பொருந்தாது முருகனுக்கு தொந்தி போடமுடியாது ஒவ்வொரு ராகத்திற்கும் அதற்குரிய அங்க லக்ஷணங்கள் தனித்தனி . அந்த அங்க லக்ஷணங்களுக்கு தான் பெயர் ஸ்வரங்கள் .ஒரு ராகத்தை define பண்ணுவது இந்த ஸ்வரங்கள் தான்.. ச ரி க ம ப த நி என்று ஏழு தான்.! அதை வைத்து எத்தனையோ permutation combination.!!ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!!.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: kannukku theriyaadha maargazhi kolangal.

Post by Ponbhairavi »

கீர்த்தனை
விநாயக சதுர்த்திக்கு முதல் நாள்.-.நடைபாதைகளின் ஓரம் களிமண் முண்டு.அருகே ஒரு தொழிலாளி .அவரைச்சுற்றி நூற்றுக்கணக்கான சிலைகள ஈரக் களிமண்ணில்.-அவர் கையில் ஒரு அச்சு-விநாயகர் MOULD. அதில் மண்ணைப் பிசைந்து அடைத்து பின் கவிழ்க்கிறார். உடனே இன்னொரு பொம்மை தயார்.
ராகம் என்பதுதான் mould.அதில் tight ஆக அடைக்கப்பட்டு உருவாவது கீர்த்தனை . அதில் ராகத்தின் அழகு முழுவதும் காணப்பெறும்.ஒரே mould. ஆனால் நூற்றுக்கணக்கான பொம்மைகள் . ஒரே ராகம் அதில் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள்.!!
Mould இல் களிமண்ணை அடைத்து எடுத்தால் களிமண் பொம்மை. Plaster of paris ஐ வைத்து நிரப்பலாம்.. காகிதக் குழம்பு ( Papier mache)
,wax, ஐ வைத்து நிரப்பலாம்.உலோகங்களைக் கலந்து உருக்கிய molten liquid ஐ வைத்தும் நிரப்பலாம்.. கீர்த்தனங்கள் பல மொழிகளில். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மை தரம் கனம்.(weight )

ஆலாபனையில் ராகத்தின் ஸ்வரூபத்தை வெறும் ஒலி வடிவில் ( த த ரி ந ன ) கேட்கிறோம்..கீர்த்தனையில்,ராகஸ்வரூபம் வெறும் ஒலி வடிவம் இல்லை . mould ஐ நிரப்பிய material ஆக ,ஒலியைத் தழுவிய சொற்களின் கோவையாக அமைக்கப்படுகிறது..இந்த கோவை உதிரி சொற்களாக இல்லாமல் ஒரு கவிதையாக இருக்கிறது.இக்கவிதையின் பொருள், இயற்றியவரின் இஷ்டப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் கேட்பவர்களுடன் ஒரு தொடர்பு (communication) ஏற்படுத்தி கொண்டால் தான் ரசனை (பாவம்) பரிமாற்றம் பூரணமாக இருக்கும் . ஆகையினால் எல்லோருக்கும் தெரிந்த கருத்தாக இருப்பது அவசியம்.. நமது கலாச்சாரத்தில் எல்லா மக்களுக்கும் (ஜாதி. மொழி இனம் ஆண் பெண் பாமரர் பண்டிதர் ) தெரிந்த பொது கருத்தாக இருப்பது எது.?
ராமனும் கிருஷ்ணனும் சிவனும் முருகனும் அவர்தம் திருவிளையாடல்களும் தான்.( கடந்த சில வருடங்களாக பாண்டுரங்க லீலைகளும் பிரபலமாகி வருகின்றன.).அதனால் தான் எல்லா கீர்த்தனைகளும் இவர்களைச் சுற்றியே இருக்கின்றன..
வாக்கேய காரர்களும் சிறந்த அருளாளர்களாக இருந்திருக்கிறார்கள்..எல்லாவற்றிற்கும் மேலாக இசை ஒரு ஈஸ்வரார்ப் பணம் செய்யப்பட்ட கலையாக ( NOT drawing roomஐ அலங்கரிக்கும் show piece of Art) இது வரை இருந்து வந்திருக்கிறது.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: kannukku theriyaadha maargazhi kolangal.

Post by Ponbhairavi »

ஸ்வரப்ரஸ்தாரம்

ராகத்தின் அடையாளத்தை ஆலாபனையில் காட் டியாகிவிட்டது ;கீர்த்தனைகள் மூலம் அந்த ராகத்தின் பாவம் பாட் டின பொருள் ஆகியவற்றை உணர்நதோம் .இது வரை அந்த ராகத்தின் இலக்கணம் , அந்த ராகத்தை define பண்ணும constituent ஸ்வரங்கள்( ச ரி க ம ப த நி ) என்னென்ன என்று சொல்லப்படவில்லை.
கீர்த்தனை நடுவில் பாடகர் ஸ்வரம் பாடுகிறார்..அப்போது தான் ராகத்தை generate பண்ணும அங்கங்களான ஸ்வரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்கிறோம் .அவற்றை சாதாரண ஆரோகண அவரோகணமாக சொல்லலாம். ஆனால் அந்த constituent ஸ்வரங்களை இப்படியும் அப்படியுமாகப் புரட்டி மெதுவாகவும் வேகமாகவும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் permutations பண்ணி தாளத்தின் வரம்புக்குள் கொத்து கொத்தாக combine பண்ணி தன் குரல் வளத்தினால் நம்மை பிரமிக்கச் செய்கிறார் பாடகர் .வேறு ராகத்தின் ஸ்வரம் கலக்காமல் இந்த jugglery செய்வதில் தான் அவர் திறமை வெளிப்படுகிறது.

ஆமாம் இதை ஏன் செய்யவேண்டும்.?
ஒரு டானிக் பாட்டில் வாங்கினால் அதன் composition என்ன,
என்னென்ன பொருள்கள் எந்த அளவில் சேர்க்கப் பட்டுள்ளன என்று label ஒட்டியிருக்கிறது அல்லவா? அதே போல் தான்.. சாதாரணமாக நாம் இதை படிப்பதில்லை. இது experts களுக்காக .அதன் சுத்த தன்மை கெடாமல் பாதுகாக்க படுகிறதா என்பதை check பண்ணுவதற்காக அவசியம் தேவை .
ஆலாபனையில் டானிக் container தயார் ஆகியது .கீர்த்தனையில் ( content) tonic தயாரிக்கப்பட்டது .. மேலே ஒட்ட வேண்டிய label தான் ஸ்வர பிரஸ்தாரம்.. Label இன் கவர்ச்சி தான் marketing இல் முக்கியம்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: kannukku theriyaadha maargazhi kolangal.

Post by cmlover »

நல்ல விளக்கம்!
ஆனால் ஒவ்வொரு பாடகரும் தன்னுடைய மனோரீதியில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் ப்ரஸ்தாரம் செய்கிறார்கள். அதுவும் ஒரு அழகு தான்! பாடகர் அதில் தன் முத்திரையை பதித்து விடுகிறார். சில வேளைகளில் கவனக்குறைவால் ராகத்தில் இல்லாத ஸ்வரமும் புகுந்து விடுகிறது. இந்த 'கலப்படம்' அனைவருக்கும் தெரிவதில்லை! கலப்படமும் ஒரு தனி சுவை தான் :)

Post Reply