காளமேகம்: முருகன் பாட்டு

Post Reply
kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

காளமேகம்: முருகன் பாட்டு

Post by kvchellappa »

"ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.
ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”

"முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?" என்றார் காளமேகம்.

"வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்" என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?

அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.

செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல்
வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே

செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும். அப்படி போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.

விளக்குமாறு என்பதற்கு விளக்கம் சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: காளமேகம்: முருகன் பாட்டு

Post by vgovindan »

வைதாரையும் அங்கு வாழவைப்போன் - கந்தரலங்காரம்.
இறைவனுக்கு மொழி ஏதும் தெரியுமோ, தெரியாதோ - அவனுக்குத் தெரிவதெல்லாம் உள்ளக் கனிவு ஒன்றே.

UmaV
Posts: 1
Joined: 04 May 2019, 05:12

Re: காளமேகம்: முருகன் பாட்டு

Post by UmaV »

I would like to learn about Kaalamegham. Can you post details about this poet? Thank you.
I will learn to write in Thamizh script soon.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: காளமேகம்: முருகன் பாட்டு

Post by thanjavooran »

A share
*காளமேகப்புலவர்* பண்டைத் தமிழ் இலக்கிய மரபினையொட்டியும் பாடல்களை இயற்றியுள்ளார். அவ்வாறு அவர் பாடி ஆக்கிவைத்த நூல்கள் திருவானைக்கா உலா, சித்திரமடல் என்பனவாகும்.
மக்கள் பலர் தன்னைச் சூழ்ந்துவர, தலைவன் உலாவருவதை வர்ணித்துக் கூறுவதாக அமைந்தது திருவானைக்கவுலா என்ற நூல். சித்திரமடல். என்பது காதல் தோல்வியடைந்த ஒருவர் தன்னை வருத்திக்கொள்வதான பொருளமைந்த நூல்

காளமேகப் புலவரின் புகழ் காலத்தால் மறையாது நிலைத்திருப்பதற்கு அவர் பாடிய தனிப்பாடல்களே பெரிதும் காரணமாகும். வசைபாடக் காளமேகம் என்று புலவர் பெருமக்களால் போற்றப்பட்ட காளமேகப் புலவரின் பாடல்கள் அத்தனையும் படிக்கப் படிக்க இன்பம் தருவன. நினைக்க நினைக்க மகிழ்ச்சி கொடுப்பன. தமிழ்மொழியின் செழுமைக்கும், வலிமைக்கும், இனிமைக்கும் சான்றாய் திகழ்வன.

மேலோட்டமாகப் பார்க்கும்போது விபரீதமாகத் தோன்றும் விதமாகவும், உள்ளார்ந்து படிக்கும்போது உயர்ந்த கருத்துக்களைக் கொண்டதாகவும் பல்வேறு பாடல்களைக் காளமேகப் புலவர் பாடியுள்ளார்.

_செருப்புக்கு வீரர்களைச்_
_சென்றுழக்கும் வேலன்_
_பொருப்புக்கு நாயகனைப் புல்ல –_ _மருப்புக்குத்_
_தண்டேன்_ _பொழிந்ததிருத்_ _தாமரைமேல்_ _வீற்றிருக்கும்_
_வண்டே விளக்குமாறே!_

என்பது அவரது பாடல்.

இதனை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்,
வேலன் செருப்புக்காக வீரர்களைத் தாக்குகிறான் என்றும், விளக்குமாறு தாமரைமலர்மேல் இருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் செருப்புக்கு என்றால் செருக்களம் சென்று, போர்க்களத்திற்குப் போய் என்பது பொருள். தாமரைமேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே என்றால் தாமரைமலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு விளக்கிச் சொல்வாயாக என்பது பொருள்.

போர்க்களம் புகுந்து வீரர்களை சிதறடிக்கும் குறிஞ்சி நிலத் தலைவனான வேலனை நான்தழுவும் வகைபற்றி, தாமரைமலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு விளக்கிக் கூறுவாயாக என்பது பாடலின் கருத்து.🙏🏼

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: காளமேகம்: முருகன் பாட்டு

Post by thanjavooran »

A share
*_சிவன் பெருமாள் காளமேகம்_*

ஒரு நாள் காளமேக புலவர் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தார். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தார். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவர் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளாரே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.

காளமேகம் பார்த்தார். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி *"கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்"* என்று முதலடியைப் பாடினார்.

தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவரை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்:

*_"கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்;_*
*_உன்னை விட நான் அதிகம்"_*
என்று சொல்லி நிறுத்தினார்.
வைணவர்கள் திகைத்து
"அதெப்படி?" என்றார்கள்.
*_"ஓன்று கேள் உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என்_* *_பிறப்போ எண்ணத் தொலையாதே"_*

என்று புதிரை விடுவித்தார்.

'சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னார்!😌


கன்னபுர மாலே
கடவுளிலும் நீ அதிகம்
உன்னை விட நான்
அதிகம்- ஒன்று கேள்
உன் பிறப்போ பத்தாம்
உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை
என் பிறப்போ
எண்ணத் தொலயாதே.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: காளமேகம்: முருகன் பாட்டு

Post by thanjavooran »

A share
*_வித்தாரப் பாடல்_*

*காளமேகப் புலவர்* வித்தாரமாக (வித்தாரம் – பரந்துபட்ட அறிவுடன்) பாடிய *ககர வருக்கப் பாடல்* ஒன்று உள்ளது.


_காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை_

_கோக்குக்கூக் காக்கைக்குக்_

_கொக்கொக்க_ – __கைக்கைக்குக்_

_காக்கைக்குக்__ _கைக்கைக்கா கா_ .

ககர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க, என்று கேட்டவர் வியக்கும் வண்ணம் பாடிய பாடல் இது.

*பொருள்:*

“காக்கைக்கு ஆகா கூகை = இரவில் காக்கையால் கூகையை (ஒரு வகை ஆந்தையை) வெல்ல இயலாது.
கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை வெல்ல முடியாது.
கோக்கு கூ காக்கைக்கு (கோ = மன்னன்; கோக்கு = மன்னனுக்கு; கூ = புவி; காக்கைக்கு = காப்பதற்கு) – (அதனால்) மன்னனுக்கு அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்றுவதற்கு; கொக்கொக்க = கொக்கு ஒக்க – கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும்,
கைக்கைக்கு = பகையை எதிர்த்து, காக்கைக்கு= காப்பாற்றுவதற்கு, கைக்கைக்கா கா = கைக்கு ஐக்கு ஆகா (காலமற்ற காலமாயின்) சாமர்த்தியமுள்ள தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்”

இந்தப்பாடலின் பொருள்:
தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து,
வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.
********************
💐🙏🏼💐

Post Reply