Arudra Dharisanam

Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Arudra Dharisanam

Post by satyabalu »

"ஆதிசேஷன் கண்ட ஆருத்ரா தரிசனம் - 26–12–2015 அன்று ஆருத்ரா தரிசனம்
பகவத் கீதையில், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கூறிய கிருஷ்ண பரமாத்மா, அதே கீதையில், ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்றும் கூறியுள்ளார். இதில் இருந்தே திருவாதிரை நட்சத்திரத்தின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய சிறப்பு மிக்க திருவாதிரை நட்சத்திரம், சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்.
ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன் மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்றுதான் சிறப்பான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பன்மடங்கு பலன்களையும், வளங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும் வழிபாடாக திகழ்கிறது. நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில் களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமைந்தது. அதன் பொருட்டே கோவில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.
ஒரு சமயம் மகாவிஷ்ணு திருபாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ‘ஆகா! அருமை! அற்புதமான நடனம்!’ என்று மனமுருகி சத்தம் போட்டார். அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். ‘சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?’ என்றனர்.
‘திருவாதிரை நாளான இன்று சிவ பெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன்’ என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர், சிவபெருமானின் ஆனந்தத் தாண்ட வத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கு உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ‘ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறாய். அப்படியென்றால், நீ பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காண முடியும். இப்போதே புறப்பட்டு போய் வா!’ என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு.
ஆதிசேஷன் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக அவரது உடலமைப்பு அமையப்பெற்றிருந்தது. பதஞ்சலி முனிவர் பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்கிரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.
திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில், ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்."

Post Reply